சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
1.043   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வடம் திகழ் மென் முலையாளைப்
பண் - தக்கராகம்   (திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை) முத்தீசர் அஞ்சனாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=P_kgIT0mzcI
6.060   திருநாவுக்கரசர்   தேவாரம்   மூத்தவனை, வானவர்க்கு; மூவா மேனி
பண் - திருத்தாண்டகம்   (திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை) முத்தீசர் அஞ்சனாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=R34xLCd86Cg
7.027   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   விடை ஆரும் கொடியாய்! வெறி
பண் - நட்டராகம்   (திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை) உச்சிவரதநாயகர் அஞ்சனாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=CDoxdF51pUQ

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.043   வடம் திகழ் மென் முலையாளைப்  
பண் - தக்கராகம்   (திருத்தலம் திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை) ; (திருத்தலம் அருள்தரு அஞ்சனாட்சியம்மை உடனுறை அருள்மிகு முத்தீசர் திருவடிகள் போற்றி )
வடம் திகழ் மென் முலையாளைப் பாகம் அது ஆக மதித்து,
தடந் திரை சேர் புனல்மாதைத் தாழ்சடை வைத்த சதுரர்;
இடம் திகழ் முப்புரி நூலர்; துன்பமொடு இன்பம் அது எல்லாம்
கடந்தவர் காதலில் வாழும் கற்குடி மா மலையாரே.

[1]
அங்கம் ஓர் ஆறொடு ஐவேள்வி ஆன அருமறை நான்கும்
பங்கம் இல் பாடலோடு ஆடல் பாணி பயின்ற படிறர்
சங்கம் அது ஆர் குறமாதர் தம் கையின் மைந்தர்கள் தாவிக்
கங்குலில் மா மதி பற்றும் கற்குடி மா மலையாரே.

[2]
நீர் அகலம் தரு சென்னி நீடிய மத்தமும் வைத்து,
தாரகையின் ஒளி சூழ்ந்த தண்மதி சூடிய சைவர்
போர் அகலம் தரு வேடர் புனத்து இடை இட்ட விறகில்
கார் அகிலின் புகை விம்மும் கற்குடி மா மலையாரே.

[3]
ஒருங்கு அளி, நீ இறைவா! என்று உம்பர்கள் ஓலம் இடக் கண்டு,
இருங்களம் ஆர விடத்தை இன் அமுது உன்னிய ஈசர்
மருங்கு அளி ஆர் பிடி வாயில் வாழ் வெதிரின் முளை வாரி,
கருங்களியானை கொடுக்கும் கற்குடி மா மலையாரே.

[4]
போர் மலி திண் சிலை கொண்டு, பூதகணம் புடை சூழ,
பார் மலி வேடு உரு ஆகி, பண்டு ஒருவற்கு அருள் செய்தார்
ஏர் மலி கேழல் கிளைத்த இனொளி மா மணி எங்கும்
கார் மலி வேடர் குவிக்கும் கற்குடி மா மலையாரே.

[5]
உலந்தவர் என்பு அது அணிந்தே, ஊர் இடு பிச்சையர் ஆகி,
விலங்கல்வில் வெங்கனலாலே மூ எயில் வேவ முனிந்தார்
நலம் தரு சிந்தையர் ஆகி, நா மலி மாலையினாலே
கலந்தவர் காதலில் வாழும் கற்குடி மா மலையாரே.

[6]
மான் இடம் ஆர்தரு கையர், மா மழு ஆரும் வலத்தார்,
ஊன் இடை ஆர் தலை ஓட்டில் உண்கலன் ஆக உகந்தார்
தேன் இடை ஆர் தரு சந்தின் திண் சிறையால் தினை வித்தி,
கான் இடை வேடர் விளைக்கும் கற்குடி மா மலையாரே.

[7]
வாள் அமர் வீரம் நினைந்த இராவணன் மாமலையின் கீழ்
தோள் அமர் வன்தலை குன்றத் தொல்விரல் ஊன்று துணைவர்
தாள் அமர் வேய் தலை பற்றித் தாழ் கரி விட்ட விசை போய்,
காளம் அது ஆர் முகில் கீறும் கற்குடி மா மலையாரே.

[8]
தண்டு அமர் தாமரையானும், தாவி இம் மண்ணை அளந்து
கொண்டவனும், அறிவு ஒண்ணாக் கொள்கையர்; வெள்விடை ஊர்வர்
வண்டு இசை ஆயின பாட, நீடிய வார் பொழில் நீழல்,
கண்டு அமர் மா மயில் ஆடும் கற்குடி மா மலையாரே.

[9]
மூத் துவர் ஆடையினாரும், மூசு கடுப்பொடியாரும்,
நாத் துவர் பொய்ம்மொழியார்கள், நயம் இலரா மதி வைத்தார்;
ஏத்து உயர் பத்தர்கள் சித்தர் இறைஞ்ச, அவர் இடம் எல்லாம்
காத்தவர் காமரு சோலைக் கற்குடி மா மலையாரே.

[10]
காமரு வார் பொழில் சூழும் கற்குடி மா மலையாரை
நா மரு வண்புகழ்க் காழி நலம் திகழ் ஞானசம்பந்தன்
பா மரு செந்தமிழ் மாலை பத்து இவை பாட வல்லார்கள்
பூ மலி வானவரோடும் பொன்னுலகில் பொலிவாரே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.060   மூத்தவனை, வானவர்க்கு; மூவா மேனி  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை) ; (திருத்தலம் அருள்தரு அஞ்சனாட்சியம்மை உடனுறை அருள்மிகு முத்தீசர் திருவடிகள் போற்றி )
மூத்தவனை, வானவர்க்கு; மூவா மேனி முதலவனை;  திரு அரையில் மூக்கப் பாம்பு ஒன்று
ஆத்தவனை; அக்கு, அரவம், ஆரம் ஆக
அணிந்தவனை; பணிந்து அடியார் அடைந்த அன்போடு
ஏத்தவனை; இறுவரையில்-தேனை, ஏனோர்க்கு; இன் அமுதம் அளித்தவனை; இடரை எல்லாம்
காத்தவனை; கற்குடியில் விழுமியானை; கற்பகத்தை;   கண் ஆரக் கண்டேன், நானே.

[1]
செய்யானை, வெளியானை, கரியான் தன்னை, திசைமுகனை, திசை எட்டும் செறிந்தான் தன்னை,
ஐயானை, நொய்யானை, சீரியானை, அணியானை,   சேயானை, ஆன் அஞ்சு ஆடும்
மெய்யானை, பொய்யாதும் இல்லான் தன்னை, விடையானை, சடையானை, வெறித்த மான் கொள்
கையானை, கற்குடியில் விழுமியானை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டேன், நானே.

[2]
மண் அதனில் ஐந்தை; மா நீரில் நான்கை; வயங்கு எரியில் மூன்றை; மாருதத்து இரண்டை;
விண் அதனில் ஒன்றை; விரிகதிரை; தண்மதியை, தாரகைகள் தம்மில்; மிக்க
எண் அதனில் எழுத்தை; ஏழ் இசையை; காமன் எழில் அழிய எரி உமிழ்ந்த இமையா நெற்றிக்-
கண்ணவனை; கற்குடியில் விழுமியானை; கற்பகத்தை;-கண் ஆரக் கண்டேன், நானே.

[3]
நல்-தவனை, புற்று அரவம் நாணினானை, நாணாது நகுதலை ஊண் நயந்தான் தன்னை,
முற்றவனை, மூவாத மேனியானை, முந்நீரின் நஞ்சம் உகந்து உண்டான் தன்னை,
பற்றவனை, பற்றார்தம் பதிகள் செற்ற படையானை, அடைவார் தம் பாவம் போக்கக்
கற்றவனை, கற்குடியில் விழுமியானை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டேன், நானே.

[4]
சங்கை தனைத் தவிர்த்து ஆண்ட தலைவன் தன்னை, சங்கரனை, தழல் உறு தாள் மழுவாள் தாங்கும்
அம் கையனை, அங்கம் அணி ஆகத்தானை, ஆகத்து ஓர்பாகத்தே அமர வைத்த
மங்கையனை, மதியொடு மாசுணமும் தம்மில் மருவ   விரிசடை முடி மேல் வைத்த வான்நீர்க்-
கங்கையனை, கற்குடியில் விழுமியானை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டேன், நானே.

[5]
பெண் அவனை, ஆண் அவனை, பேடு ஆனானை, பிறப்பு இலியை, இறப்பு இலியை, பேரா வாணி
விண்ணவனை, விண்ணவர்க்கும் மேல் ஆனானை, வேதியனை, வேதத்தின் கீதம் பாடும்
பண்ணவனை, பண்ணில் வரு பயன் ஆனானை, பார் அவனை, பாரில் வாழ் உயிர்கட்கு எல்லாம்
கண் அவனை, கற்குடியில் விழுமியானை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டேன், நானே.

[6]
பண்டானை, பரந்தானை, குவிந்தான் தன்னை, பாரானை, விண் ஆய் இவ் உலகம் எல்லாம்
உண்டானை, உமிழ்ந்தானை, உடையான் தன்னை, ஒருவரும் தன் பெருமைதனை அறிய ஒண்ணா
விண்டானை, விண்டார் தம் புரங்கள் மூன்றும் வெவ் அழலில் வெந்து பொடி ஆகி வீழக்
கண்டானை, கற்குடியில் விழுமியானை, கற்பகத்தை,   கண் ஆரக் கண்டேன், நானே.

[7]
வானவனை, வானவர்க்கு மேல் ஆனானை, வணங்கும் அடியார் மனத்துள் மருவிப் புக்க
தேன் அவனை, தேவர் தொழு கழலான் தன்னை, செய் குணங்கள் பல ஆகி நின்ற வென்றிக்
கோன் அவனை, கொல்லை விடை ஏற்றினானை, குழல் முழவம் இயம்பக் கூத்து ஆட வல்ல
கானவனை, கற்குடியில் விழுமியானை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டேன், நானே.

[8]
கொலை யானை உரி போர்த்த கொள்கையானை, கோள் அரியை, கூர் அம்பா வரை மேல் கோத்த
சிலையானை, செம்மை தரு பொருளான் தன்னை, திரி புரத்தோர் மூவர்க்குச் செம்மை செய்த
தலையானை, தத்துவங்கள் ஆனான் தன்னை, தையல் ஓர்பங்கினனை, தன் கை ஏந்து
கலையானை, கற்குடியில் விழுமியானை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டேன், நானே.

[9]
பொழிலானை, பொழில் ஆரும் புன்கூரானை, புறம் பயனை, அறம் புரிந்த புகலூரானை,
எழிலானை, இடை மருதின் இடம் கொண்டானை, ஈங்கோய் நீங்காது உறையும் இறைவன் தன்னை,
அழல் ஆடு மேனியனை, அன்று சென்று அக் குன்று எடுத்த அரக்கன் தோள் நெரிய ஊன்றும்
கழலானை, கற்குடியில் விழுமியானை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டேன், நானே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.027   விடை ஆரும் கொடியாய்! வெறி  
பண் - நட்டராகம்   (திருத்தலம் திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை) ; (திருத்தலம் அருள்தரு அஞ்சனாட்சியம்மை உடனுறை அருள்மிகு உச்சிவரதநாயகர் திருவடிகள் போற்றி )
விடை ஆரும் கொடியாய்! வெறி ஆர் மலர்க் கொன்றையினாய்!
படை ஆர் வெண்மழுவா! பரம் ஆய பரம்பரனே!
கடி ஆர் பூம்பொழில் சூழ் திருக்கற்குடி மன்னி நின்ற
அடிகேள்! எம்பெருமான்! அடியேனையும், அஞ்சல்! என்னே!.

[1]
மறையோர் வானவரும் தொழுது ஏத்தி வணங்க நின்ற
இறைவா! எம்பெருமான்! எனக்கு இன் அமுது ஆயவனே!
கறை ஆர் சோலைகள் சூழ் திருக்கற்குடி மன்னி நின்ற
அறவா! அங்கணனே! அடியேனையும், அஞ்சல்! என்னே!.

[2]
சிலையால் முப்புரங்கள் பொடி ஆகச் சிதைத்தவனே!
மலை மேல் மா மருந்தே! மட மாது இடம் கொண்டவனே!
கலை சேர் கையினனே! திருக்கற்குடி மன்னி நின்ற
அலை சேர் செஞ்சடையாய்! அடியேனையும், அஞ்சல்! என்னே!.

[3]
செய்யார் மேனியனே! திரு நீல மிடற்றினனே!
மை ஆர் கண்ணி பங்கா! மதயானை உரித்தவனே!
கை ஆர் சூலத்தினாய் திருக்கற்குடி மன்னி நின்ற
ஐயா! எம்பெருமான்! அடியேனையும், அஞ்சல்! என்னே! .

[4]
சந்து ஆர் வெண்குழையாய்! சரி கோவண ஆடையனே!
பந்து ஆரும் விரலாள் ஒரு பாகம் அமர்ந்தவனே!
கந்து ஆர் சோலைகள் சூழ் திருக்கற்குடி மன்னி நின்ற
எந்தாய்! எம்பெருமான்! அடியேனையும் ஏன்று கொள்ளே!.

[5]
அரை ஆர் கீளொடு கோவணமும்(ம்) அரவும்(ம்) அசைத்து
விரை ஆர் கொன்றை உடன் விளங்கும் பிறை மேல் உடையாய்!
கரை ஆரும் வயல் சூழ் திருக்கற்குடி மன்னி நின்ற
அரையா! எம்பெருமான்! அடியேனையும் அஞ்சல்! என்னே!.

[6]
பாரார் விண்ணவரும் பரவிப் பணிந்து ஏத்த நின்ற
சீர் ஆர் மேனியனே! திகழ் நீல மிடற்றினனே!
கார் ஆர் பூம்பொழில் சூழ் திருக்கற்குடி மன்னி நின்ற
ஆரா இன்னமுதே! அடியேனையும், அஞ்சல்! என்னே! .

[7]
நிலனே, நீர், வளி, தீ, நெடுவானகம், ஆகி நின்ற
புலனே! புண்டரிகத்து அயன், மாலவன், போற்றி செய்யும்
கனலே! கற்பகமே! திருக்கற்குடி மன்னி நின்ற
அனல் சேர் கையினனே! அடியேனையும், அஞ்சல்! என்னே!.

[8]
வரும் காலன்(ன்) உயிரை மடியத் திரு மெல்விரலால்
பெரும் பாலன் தனக்கு ஆய்ப் பிரிவித்த பெருந்தகையே!
கரும்பு ஆரும் வயல் சூழ் திருக்கற்குடி மன்னி நின்ற
விரும்பா! எம்பெருமான்! அடியேனையும் வேண்டுதியே! .

[9]
அலை ஆர் தண் புனல் சூழ்ந்து, அழகு ஆகி, விழவு அமரும்
கலை ஆர் மா தவர் சேர் திருக்கற்குடிக் கற்பகத்தைச்
சிலை ஆர் வாள் நுதலாள் நல்ல சிங்கடி அப்பன் உரை
விலை ஆர் மாலை வல்லார் வியல் மூ உலகு ஆள்பவரே .

[10]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list